

திண்டுக்கல்லில் நடைபெற்ற கிளி மூக்கு, விசிறி வால் சேவல் கண்காட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான சேவல் உட்பட விதவிதமான சேவல்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்றன.
திண்டுக்கல்லில் உலக அசில் ஆர்கனைசேஷன், அனைத்து இந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் சார்பில் கிளி மூக்கு, விசிறிவால் சேவல் கண்காட்சி ஏழாவது ஆண்டாக நேற்று நடைபெற்றது.
கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் நெல்சன் தலைமை வகித்தார். தலைவர் ஜெயக்குமார், செயலாளர் உஷ்மான், துணைச் செயலாளர் பிரபாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கண்காட்சியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300- க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.
இதில் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மதிப்பிலான கருங்கீரி, மயில் சேவல், கொக்கு வெள்ளை, என்னைக்கருப்பு, காகம், மஞ்சள் பொன்ரம், செவலை உள்ளிட்ட பல்வேறு வகையான கிளி மூக்கு, விசிறிவால் சேவல்கள் இடம் பெற்றன.
இதுகுறித்து கண்காட்சி நடத்தியவர்கள் கூறியதாவது: பாரம்பரிய நாட்டு ரகத்தை காக்கும் வகையில் இந்த சேவல் கண்காட்சியை நடத்தி வருகிறோம். சிறந்த சேவல்களை தேர்ந்தெடுத்து 25 பேருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்குகிறோம். இரண்டாம் பரிசாக 25 பேருக்கு 25 மிக்சி வழங்குகிறோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடு காரணமாக நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நடைபெற்றதால் பல பகுதிகளில் இருந்து ஆர்வமுடன் சேவல் வளர்ப்பவர்கள், பார்வையாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.