தற்கொலை செய்துகொண்ட மநீம வேட்பாளரின் குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் ஆறுதல்

தற்கொலை செய்துகொண்ட மநீம வேட்பாளரின் குடும்பத்தினருக்கு கமல்ஹாசன் ஆறுதல்
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூரில் தற்கொலை செய்துகொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரின் குடும்பத்தினருக்கு, அலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினர்.

திருப்பூர் - கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் வசிப்பவர் மணி (55). மூட்டை தூக்கும் தொழிலாளியான இவர், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாநகராட்சியின் 36-வது வார்டில் போட்டியிட்டார். இதில், 44 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். தோல்வியை ஏற்க மறுத்த நிலையில், கடந்த 24-ம் தேதி இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது மனைவி சுப்பாத்தாள் (50). இவர்களுடைய இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் மணியின் சடலம் எரியூட்டப்பட்டது. இந்நிலையில், கட்சி நிர்வாகிகள் மூலமாக மணியின் குடும்பத்தினரை மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

அப்போது, "எல்லா நடிகர்களுக்கும், மனிதர்களுக்கும் மணி போன்ற மனிதர்கள் கிடைப்பது அபூர்வம். குடும்பத்தில் உங்களுக்கும் பெரிய இழப்பு, தனிப்பட்ட முறையில் எனக்கும், கட்சிக்கும் பெரிய இழப்பு. உங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருகிறோம்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in