

சென்னை: இரு பிரிவினரிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டதாக தமிழக பாஜக இளைஞரணித் தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழக பாஜக இளைஞரணித் தலைவரான வினோஜ் பி.செல்வம் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவு இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையைத் தூண்டும் வகையில் இருந்ததாகவும், பொது அமைதியைக் குலைக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி வினோஜ் பி.செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் நாளிதழ்களில் வந்த தகவல்களையே பாஜகவுக்காக பரப்புரை செய்யும் நோக்கில் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்ததாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். பொங்கியப்பன், பாஜக இளைஞரணித் தலைவர் வினோஜ் பி.செல்வத்துக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரிய செளதாமணியின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.