உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: "மத்திய அரசின் மூலம் தனி விமானம் ஏற்பாடு செய்து உக்ரைனில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய அழுத்தங்களை தமிழக அரசு தர வேண்டும்" என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை அறிவித்து குண்டுகளை வீசி வரும் நிலையில், அந்த நாட்டிற்கு கல்விக்காகவும், வேலைக்காகவும் சென்றுள்ள தமிழர்களை பத்திரமாக மீட்டு தமிழகம் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போரின் காரணமாக விமான சேவைகள் குறைந்து அதன் கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு வேலைக்காகவும், கல்விக்காகவும் சென்றுள்ளவர்களிடம்
விமானக் கட்டணத்திற்கான தொகைகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் உக்ரைன் நாட்டிலிருந்து திரும்ப முடியாத சூழல் உள்ளது.

எனவே தமிழக அரசு, மத்திய அரசின் மூலம் தனி விமானம் ஏற்பாடு செய்து உக்ரைனில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய அழுத்தங்களைத் தர வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழக முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றேன்" என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in