

சென்னை: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் பகுதியில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்த உத்தரவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் நெடுஞ்சாலையில் கனரக வாகன போக்குவரத்து காரணமாக விலங்குகள் பலியாகின்றன. அதனால், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட சாலையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை பிப்.10 முதல் அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கியஅமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரி பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவ, மாணவியரும், வேலைக்கு செல்லும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில் கூடுதல் தலைமைவழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யக்கோரி பொதுமக்கள் தரப்பில்கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர்தான் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை அமல்படுத்தும்படி மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒன்று சரணாலயம் உள்ள பகுதியில் இருக்கும் கிராமங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும். அல்லது அதை புலிகள் சரணாலயம் அல்ல என அறிவிக்க வேண்டும். டேராடூன் - ஹரித்வார் இடையில் உள்ள சாலையில் யானைகள் கடப்பதால் விபத்துகளை தவிர்ப்பதற்காக மேல்மட்ட சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல இங்கும் மேல்மட்ட சாலை அமைக்கலாம். அதற்காக இரவு நேர போக்குவரத்துக்கான தடை உத்தரவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது’’ எனக் கூறி மறுப்பு தெரிவித்தனர்.
வாகன போக்குவரத்துக்கு தடை அமலில் உள்ள நேரத்தில்பள்ளிகள் ஏதும் செயல்படுவதில்லை என்றும், இதற்கு மாற்றுவழிகள் உள்ளதா அல்லது மாற்று வழித்தடத்துக்கு ஏதும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்குக்கு பதிலளிக்கும்படி இடையீட்டு மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.