இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமேசுவரம் மீனவர்களின் 2 விசைப்படகுகளையும், 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் நேற்று முன்தினம் மாலை தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, 2 விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படகுகளில் இருந்த சேவியர்(43), ராஜா(44), ஆரோக்கியதாஸ் (44), ஜேம்ஸ்(45), ரஞ்சித்(43), ராமன்(41), முனீஸ்வரன்(30), சேகர்(35), முக்தா(25), ஜெரோமியாஸ்(46), பாதாளம்(59), நெப்போலியன்(46) ஆகிய 12 மீனவர்களை கைது செய்தனர். இவர்களை இரணைத்தீவு கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

ஏற்கெனவே ராமேசுவரம், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 32 பேர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 32 பேரையும் விடுவிக்கக் கோரி கடந்த 9-ம் தேதி முதல் ராமேசுவரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன் பிறகு மீன் பிடிக்க நேற்று முன்தினம்தான் மீண்டும் கடலுக்குச் சென்றனர்.

இந்நிலையில் அன்றைய தினம் மாலையே 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது ராமேசுவரம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in