

கட்சி நிர்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான கே.பழனிசாமி கடந்தாண்டு செப்.24-ல் சாத்தூர் சென்றபோது அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாவட்ட கிளைச் செயலாளரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ராசு, ஹரிஹரசுதன், பாண்டியராஜன், மாரிக்கனி ஆகிய 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோரும், புகார்தாரரும் காணொலி மூலமாக ஆஜராகி இருதரப்பிலும் சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். அதைப் பதிவு செய்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் உயர் நீதிமன்ற கிளை இளம் வழக்கறிஞர் நல நிதியத் துக்கு ரூ.50 ஆயிரம் செலுத்த ராஜேந்திர பாலாஜிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.