கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை சேமிக்க பாதாள கட்டமைப்பை ஏற்படுத்துவது தென் தமிழகத்திற்கு பேராபத்து: அன்புமணி

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கேயே சேமிக்கும் திட்டத்தை கைவிடுவதுடன், டெண்டரையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைப்பதற்கான பாதாள கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை மத்திய அரசு கோரியிருக்கிறது. இது தென் தமிழகத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தி விடும்.

அணுக்கழிவுகளை பாதுகாப்பதற்கான பாதாள கட்டமைப்பு கூடங்குளம் வளாகத்தில் அமைக்கப்படக் கூடாது; வேறு இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்திருக்கிறது. அதை மதிக்காமல் கூடங்குளம் வளாகத்தில் அணுக்கழிவை சேமிப்பது கண்டிக்கத்தக்கது.

கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் முதல் இரு அணு உலைகளின் கழிவுகளும் அந்த வளாகத்தில்தான் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. மூன்று, நான்காவது உலைகளின் கழிவுகளும் அங்கு சேமிக்கப்பட்டால், அணுக்கழிவு கதிர்வீச்சு ஏற்பட்டால் ஒட்டுமொத்த தென் தமிழகமும் பாதிக்கப்படும்.

அணுக்கழிவை கோலார் தங்கவயலில் சேமிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்தான் கூடங்குளத்திலேயே சேமிக்க மத்திய அரசு முயல்கிறது. இது தமிழக மக்களின் பாதுகாப்பை இரண்டாம் பட்சமாக கருதும் செயல். அணுக்கழிவு மையத் திட்டத்தை கைவிடுவதுடன், டெண்டரையும் திரும்பப்பெற வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in