டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகின்றன.

அவற்றை வாங்கி, அருந்துவோர், பாட்டில்களை உடைத்து வயல்வெளிகளில் வீசிச் சென்று விடுகின்றனர்.கண்ணாடி பாட்டில்கள் எளிதில் மக்கும் தன்மை கொண்டவை அல்ல என்பதால் அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். வயல் வெளிகளில் பாட்டில்கள் வீசப்படுவதால் விவசாயிகள் காயமடைகின்றனர்.

புதுச்சேரியில், பாக்கெட்களிலும், பிளாஸ்டிக் பாட்டில்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கண்ணாடிகளை பயன்படுத்த கூடாது என உத்தரவிட முடியாது. கண்ணாடி பாட்டில்களை வயல்வெளியில் வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் கோரிக்கை வைக்கப்படவில்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் கண்ணாடி பாட்டில்களை மறுசுழற்சி செய்ய முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மதுபானம் மட்டுமல்லாமல், பால் கூட கண்ணாடி பாட்டில்களில் வழங்கப்படுவதாகவும், தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கண்ணாடி பாட்டில்கள் பயன்படுத்தப்படுவதால் இந்த கோரிக்கையை ஏற்க முடியாது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in