Published : 05 Feb 2022 06:46 AM
Last Updated : 05 Feb 2022 06:46 AM

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதை உறுதி செய்யுங்கள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய விழாவில் ஆண்டுதோறும் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி,மார்ச் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங் கேற்க விரும்பும் தமிழக மீனவ பக்தர்களின் பாதுகாப்பான பயணத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.

அனுமதி மறுப்பு

இந்நிலையில், பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த ஆண்டு திருவிழாவில் தமிழக மீனவபக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக எனது கவனத்துக்கு வந்துள்ளது.

தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர்கள், கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் பல ஆண்டுகளாக ஆன்மிக மற்றும் உணர்வுப்பூர்வமான தொடர்பு கொண்டுள்ளனர். கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளால் அனுமதிமறுக்கப்பட்டுள்ளது தமிழக மீனவர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருநாட்டு மக்களிடையே நல்லுறவு

ஆண்டுதோறும் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் புனித அந்தோணியார் தேவாலயத்தின் ஆண்டு பெருவிழாவில் தமிழகமீனவ பக்தர்கள், தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்ய இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இந்த முயற்சி, இரு நாட்டு மக்களிடையே நல்லுறவைப் பேணு வதை உறுதி செய்யும்.

இவ்வாறு முதல்வர் தெரி வித்துள்ளார்.

இந்தக் கடிதத்தை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x