புதுச்சேரியில் புதிதாக 640 பேருக்கு கரோனா தொற்று

புதுச்சேரியில் புதிதாக 640 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 640 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (பிப்.1) வெளியிட்டுள்ள தகவலில்: ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,366 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 380, காரைக்கால்- 179, ஏனாம்- 71, மாஹே- 10 என மொத்தம் 640 (19.01 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் மொத்த தொற்று பாதிப்பு 1 லட்சத்து 61 ஆயிரத்து 891 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகளில் 144 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 9,123 பேரும் என மொத்தமாக 9,267 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் புதுச்சேரி கிருமாம்பாக்கம் வேணுகோபால் நகர் 33 வயது ஆண் நபர், முள்ளோடை மதிகிருஷ்ணாபுரம் 44 வயது ஆண் நபர், லாஸ்பேட்டை 41 வயது ஆண் நபர், தட்டாஞ்சாவடி மருதம் நகர் 75 வயது முதியவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,935 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது. புதிதாக 1,069 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 689 (93.08 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தமாக 15 லட்சத்து 35 ஆயிரத்து 643 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.’’இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜனவரி 31 ஆம் தேதி புதுச்சேரியில் புதிதாக 504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in