புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 6 மாணவிகள் உட்பட அரசுப் பள்ளி மாணவர்கள் 20 பேருக்கு எம்பிபிஎஸ் சீட்

மருத்துவ கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்த மகிழ்ச்சியில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.
மருத்துவ கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்த மகிழ்ச்சியில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்.
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே அரசுப் பள்ளியைச் சேர்ந்த 6 மாணவிகள் உட்பட 20 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவபடிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கிஉள்ளது.

6 மாணவிகள்

இதில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நா.தீபிகா, ச.வாலண்டினா, எம்.கனிகா, ஜெ.சுவாதி, ஆர்.யமுனா ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க தேர்வாகி உள்ளனர். இதேபோல, அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி ப.நிஷாலினிக்கு அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதனால், ஒரே பள்ளியைச் சேர்ந்த 6 பேருக்கு எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.

மாவட்டத்தில் 20 பேர்

இதேபோல, மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்களான மேற்பனைக்காடு ஷம்ஷியா அப்ரின், சிலட்டூர் ஐ.சிவா, அரையப்பட்டி கார்த்திக்ராஜா, வயலோகம் என்.கீர்த்திகா, சிதம்பர விடுதி நாகராஜன், வடகாடு பி.பவித்ரன், எல்.என் புரம் கு.புவியரசி, கல்லாக்கோட்டை ஆர்.பவானி, கொடும்பாளூர் நந்தினி, கட்டுமாவடிகார்த்திகா, ரெகுநாதபுரம் எம்.முத்தமிழ்தேவி, கல்லாக்கோட்டை எஸ்.ஆர்த்தி ஆகிய 12 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அரையப்பட்டி வைத்தியநாதன் மற்றும் சுப்பிரமணியபுரம் திலகா ஆகியோருக்கு அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.

மேலும், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி டி.நிஷாவுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் சீட் கிடைத்துஉள்ளது.

நிகழாண்டு இதுவரை 20 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது. இதன் எண்ணிக்கை மேலும் உயரும் என கல்வித் துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 4 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in