Published : 28 Jan 2022 09:16 PM
Last Updated : 28 Jan 2022 09:16 PM

மதுரையில் ஒரே மாநராட்சிப் பள்ளியில் படித்த 4 மாணவிகள் மருத்துவப் படிப்புக்குத் தேர்வு

மதுரை: மதுரையில் ஒரே மாநகராட்சிப் பள்ளியில் படித்த 4 மாணவிகள் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படிக்கத் தேர்வாகியுள்ளனர்.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான நீட் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு விட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை இயற்றியது. தற்போது மருத்துவப்படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு தரவரிசை வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் கவுன்சிலர் தொடங்கியிருக்கிறது.

இதில், 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த 4 மாணவிகள் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஒரு மாணவிக்கு பல் மருத்துவம் கிடைக்க இடம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பூங்காவனம் கூறுகையில், ‘‘மாணவி பிரயங்கா நீட் தேர்வில் 414 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகள் அளவில் மதுரை மாவட்டத்தில் முதலிடம் பெற்றார். 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டில் மாநில அளவிலான தரவரிசையில் 25வது இடத்தை பிடித்தார். தீபஸ்ரீ என்ற மாணவி 301 மதிப்பெண்கள் பெற்று 179 இடத்தை பெற்றார். மாணவி வினோதினி 283 மதிப்பெண் பெற்று 231-வது இடத்தையும், சங்கீதா 258 மதிப்பெண் பெற்று 319-வது இடத்தையும், கவுல்யா 226 மதிப்பெண் பெற்று 461 வது இடத்தையும் பெற்றனர். இந்த மாணவிகள் முதல் முறையாக நீட் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இன்று சென்னையில் நடந்த மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இதில், மாணவி பிரியங்காவிற்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. தீபாஸ்ரீ க்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியிலும் படிக்க இடம் கிடைத்துள்ளது. வினோதினி விருதுநகர் மருத்துவுக் கல்லூரியிலும், சங்கீதா மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியிலும் சேர உள்ளனர். மாணவி கவுசல்யாவுக்கு மதுரை சிஎஸ்ஐ பல் மருத்துவுக்கல்லூரியிலும் இடம் கிடைத்தது ’’ என்றார்.

கடந்த 2019-2021ம் கல்வியாண்டில் மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் பயிற்சி கையேடு வழங்கப்பெற்றது. பெருந்தோற்று காலத்திலும் பெரும் சிரமத்திற்கு இடையே இந்தப் பள்ளி மாணவிகள் நீட்தேர்வுக்கு தயாராகி தற்போது சாதனை படைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x