Published : 27 Jan 2022 10:03 AM
Last Updated : 27 Jan 2022 10:03 AM

புலிகளின் எண்ணிக்கை இரட்டிப்பானதால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு விருது அறிவிப்பு

ஈரோடு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதற்காக சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள வனங்களில் வாழும் புலிகளைக்காப்பதற்காகவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், டபுள்யு டபுள்யு எப் இந்தியா நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச அளவிலான அமைப்புகள்,பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த அமைப்பினர் நடத்திய ஆய்வில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், கடந்த 2010-ம் ஆண்டு இருந்த புலிகளின் எண்ணிக்கை, தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து சத்தி புலிகள் காப்பகத்திற்கு டிஎக்ஸ் 2(TX2) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டபுள்யு டபுள்யு எப் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நீலகிரி உயிர்க்கோள நிலப்பரப்பைச் சேர்ந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் புலிகள் வாழ்கின்றன. கடந்த 2013-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட சத்யமங்கலத்தில் தற்போது 80 புலிகள் உள்ளன. முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் மற்றும் பி.ஆர்ஹில்ஸ் புலிகள் காப்பகங்களுடன் இந்த காப்பகம் இணைந்துள்ளது. இதனால் புலிகளால் எளிதாக இரை தேடவும் புதிய எல்லைக்குள் பிரவேசிக்கவும் முடிகிறது.

இதேபோல், புலிகளின் எண்ணிக்கையை இருமடங்கு அதிகரித்ததற்காக நேபாளத்தில் உள்ள பார்டியா தேசியப் பூங்காவும், இந்த ஆண்டுக்கான டிஎக்ஸ் 2 விருதினைப் பெற்றுள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்திற்கும் இடையே புலிகள் தடையின்றி, எல்லைகளைத் தாண்டிச் சென்று வர இந்த பூங்கா வழிவகுக்கிறது.

உலக அளவில் 2010-ம் ஆண்டு புலிகளின் எண்ணிக்கை 3200 ஆக சரிந்திருந்த நிலையில், 2016-ல் நடத்தப்பட்ட ஆய்வில் புலிகளின் எண்ணிக்கை 3900-மாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x