Published : 27 Jan 2022 08:46 AM
Last Updated : 27 Jan 2022 08:46 AM

காஞ்சி, செங்கை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குடியரசு தினவிழாவில் ஆட்சியர்கள் தேசியக் கொடியேற்றினர்

காஞ்சி/செங்கை/ திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகங்களில் 73-வது குடியரசு தினவிழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடி ஏற்றிவைத்துக் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கத்தில் 73-வது குடியரசு தினவிழா நேற்றுநடைபெற்றது. இதில், தேசியக் கொடியை ஏற்றி வைத்த ஆட்சியர் மா.ஆர்த்தி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உடன் இருந்தார்.

இதையடுத்து, மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 25 போலீஸாருக்கு தமிழ்நாடு முதல்வரின் காவலர் பதக்கத்தை ஆட்சியர் வழங்கினார். மேலும், சிறந்தஅரசுத் துறை அலுவலர்களுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், காவல் துறை சரக துணைத் தலைவர் சத்யபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

22 போலீஸாருக்கு பதக்கம்

செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆட்சியர் ராகுல் நாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட எஸ்பி.அரவிந்தனுடன் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், 50 பயனாளிகளுக்கு ரூ.42 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் 22 போலீஸாருக்கு முதல்வரின் காவலர் பதக்கங்களை வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், கூடுதல் எஸ்பி ஆதார்ஸ் பச்சேரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், கோட்டாட்சியர்கள் அறிவுடைநம்பி, சாகிதா பர்வீன், சரஸ்வதி, முதன்மைக் கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலாமேரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி மூவிஸ் தீபிகா சுந்தரவதனம் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். இதேபோல், தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் இளங்கோவன் மற்றும் மாநகர் காவல் அலுவலகத்தில் ஆணையர் ரவி ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றினர்.

ரூ.4.91 கோடி நலத்திட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

பின்னர், மாவட்ட எஸ்பி வருண்குமார் உடன் காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையே ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, 26 போலீஸாருக்கு முதல்வரின் காவலர் பதக்கங்களையும், 36 பயனாளிகளுக்கு ரூ.4.91 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் சிறப்பாக பணியாற்றிய அரசுஅலுவலர்களுக்கு நற்சான்றுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) குணசேகரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனாமிகா உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், இந்த 3 மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி குடியரசுதினவிழா கொண்டாடப்பட்டது.

சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்களைக் கவுரவிக்கும் வகையில், பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x