

திருப்பூர்: அவிநாசி அருகே பாப்பாங்குளம் பகுதியில் உள்ள தோட்டத்தில் இன்று அதிகாலை புகுந்த சிறுத்தை தாக்கியதில் இருவர் காயம் அடைந்தனர்.
அவிநாசி அருகே பாப்பாங்குளத்தை சேர்ந்தவர் வரதராஜன் (63). தோட்டத்து உரிமையாளர். இவர் தனது தோட்டத்தில் சோளத்தட்டை விதைத்துள்ளார். இந்த நிலையில், அறுவடைப் பணிகளை கடந்த 2 நாட்களாக மேற்கொண்டு வந்துள்ளார். இதில் விவசாய கூலித் தொழிலாளி மாறன் (66) என்பவர் ஈடுபட்டு வந்தார்.
இன்று அதிகாலை வழக்கம்போல் இருவரும் தோட்டத்தில் அறுவடைப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது அங்கு புகுந்த சிறுத்தை, வரதராஜனின் தோள்பட்டை பகுதியை பலமாக தாக்கியது. அதேபோல், அந்த நிலத்திலேயே வரதராஜன் அருகில் சோளத்தட்டையை அறுத்துக்கொண்டிருந்த மாறனின் முகத்திலும் சிறுத்தை தாக்கியுள்ளது. இதில் இருவரின் அலறல் சத்தம் கேட்ட, அருகில் வசித்து வந்த தோட்டத்துக்காரர்கள் சேவூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, திருப்பூர் கோட்ட வனச்சரகத்தினர், சேவூர் போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு சிறுத்தையைத் தேடி வருகின்றனர்.
படுகாயம் அடைந்த 2 பேரும் அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவிநாசி பகுதியில் சிறுத்தை புகுந்த சம்பவம், அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.