கோவை: சளி, காய்ச்சல், இருமலுக்காக மருந்து கடைகளில் தினசரி விற்கப்படும் மருந்துகளின் விவரங்களை பெறும் மருந்து கட்டுப்பாட்டு துறையினர்

கோவை: சளி, காய்ச்சல், இருமலுக்காக மருந்து கடைகளில் தினசரி விற்கப்படும் மருந்துகளின் விவரங்களை பெறும் மருந்து கட்டுப்பாட்டு துறையினர்
Updated on
1 min read

கோவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதேநேரம், சளி, காய்ச்சல் பாதிப்புக்காக மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றின் அறிகுறி களான காய்ச்சல், சளி, இருமல்போன்றவற்றையும், சிலர் சாதாரணவைரஸ் காய்ச்சல் என எண்ணுகின்றனர். அதற்கு பாரசிட்டமால் போன்ற மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரையின்றி சுயமாக மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இதனால், சிலருக்கு நுரையீரல் பாதிப்பு தாமதமாக அடையாளம் காணப்பட்டு, ஆபத்தான சூழல் ஏற்படுகிறது.

எனவே, அறிகுறிகளை புறக்கணிக்காமல், உடனடியாக மருத்துவரை அணுகி, அவர்களின் பரிந்துரையின்பேரில் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவ துறையினர் அறிவுறுத்துகின்றனர். மேலும், கரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டும், சுயமாக மருந்து உட்கொள்வதை கட்டுப்படுத்தவும் காய்ச்சல், சளி, இருமலுக்கான மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி விற்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மருந்து கட்டுப்பாட்டுதுறையினர் கூறும்போது, “கோவையில் மட்டும் சுமார் 1,500 மருந்தகங்கள் உள்ளன. இங்கு பாரசிட்டமால், ஐவர்மெக்டின் உள்ளிட்ட அனைத்து மருந்துகளை விற்பனை செய்யும்போதும் கண்டிப்பாக மருத்துவர்களின் பரிந்துரை சீட்டை பெற்றுக்கொண்டு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். உயிர்காக்கும் ஸ்டீராய்டு மருந்துகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை சரியாக பராமரிக்க வேண்டும். மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மருந்துகளை விற்பனை செய்தால் நோயாளியின் பெயர், முகவரி, செல்போன் எண் மற்றும் மருத்துவரின் தகவல்களை மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு தினசரி தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன.

வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ள கரோனா நோயாளி களுக்கு மருத்துவர்கள் தொலைபேசி அல்லது எஸ்எம்எஸ் மூலம் பரிந்துரை செய்திருந்தால் அதற்குண்டான ஆதாரங்களைப் பெற்றுக்கொண்டு மருந்துகளை வழங்கலாம். எக்காரணம்கொண்டும் மருந்துகளை பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in