மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை; கல்லூரி நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்: ராமதாஸ்

மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை; கல்லூரி நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்: ராமதாஸ்
Updated on
1 min read

சென்னை: பண்ருட்டியில் மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை செய்த தனியார் செவிலியர் கல்லூரி நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பண்ருட்டி தனியார் செவிலியர் கல்லூரியில் படித்து வந்த மாணவியை அதன் தாளாளர் டேவிட் அசோக்குமார் உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதைக் காணொலியில் பதிவு செய்து, அதைக் காட்டி மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர்.

அதைத் தாங்கிக்கொள்ள முடியாத விழுப்புரம் மாவட்டம் ஆனைக்கவுண்டன் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, பண்ருட்டி மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மாணவி கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார். மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த மூவர், அதற்குத் துணையாக இருந்த கல்லூரிப் பெண் பொறுப்பாளர் உள்ளிட்ட நால்வர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாகத் தப்பிவிடக்கூடிய ஆபத்து உள்ளது.

திண்டுக்கல் தனியார் செவிலியர் கல்லூரியில் மாணவிகள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அதன் தாளாளர் ஜோதிமுருகன் 10 நாட்களில் பிணையில் வெளிவந்து விட்டார். இந்த வழக்கின் குற்றவாளிகளும் அதேபோல் தப்பிவிடக்கூடாது. மாணவி பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்குத் தூண்டப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். கைது செய்யப்பட்ட நால்வரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தரமான மருத்துவம் அளிக்க வேண்டும். அவர் அரசு செவிலியர் கல்லூரியில் படிப்பைத் தொடர வகை செய்வதுடன், அரசு வேலைக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மாணவிக்கு நிவாரண உதவியாக அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்’’ என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in