

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு வரும் 19-ம் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது.
கரோனா பரவலால் நீட் தேர்வில் தாமதம், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு, ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உள்ளிட்டகாரணங்களால், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2021-22 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையில், ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 4 சுற்று அகில இந்திய கலந்தாய்வு கடந்த 12-ம்தேதி இணையதளம் மூலம் தொடங்கியது.
இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய கலந்தாய்வு வரும் 19-ம் தேதி www.mcc.nic.in என்ற இணையதளத்தில் தொடங்குகிறது.
4 சுற்றுகளாக நடக்கிறது
நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதுதவிர, எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.
நீட் தேர்வில் தகுதி பெற்றமாணவ, மாணவிகள் இணையதளத்தில் வரும் 19-ம் தேதி முதல்24-ம் தேதி நண்பகல் 12 மணி வரை பதிவு செய்ய வேண்டும்.
வரும் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களை தேர்வு செய்யலாம். 25, 26-ம் தேதிகளில் அவற்றை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். வரும் 27, 28-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் 29-ம் தேதி வெளியிடப்படும். 30-ம் தேதி முதல் பிப்.4-ம்தேதிக்குள் இடஒதுக்கீடு பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
கலந்தாய்வின் இரண்டாம் சுற்று பிப்.9-ம் தேதி, 3-ம் சுற்று மார்ச் 2-ம் தேதி, 4-ம் சுற்று மார்ச் 21-ம் தேதி தொடங்குகிறது.
இளநிலை, முதுநிலை அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று முடிவுகள் வந்ததும், தமிழகத்தில் மாநில அரசு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.