Published : 16 Jan 2022 07:57 AM
Last Updated : 16 Jan 2022 07:57 AM
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டு தனிமைக்கு அனுமதிக்க வேண்டும் என்று, அனைத்து மாவட்டஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவப் பரிசோதனை செய்யாமல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டு தனிமைக்கு அனுமதிக்கக் கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கரோனா தடுப்பு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். யாரை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், யாரை பரிசோதனைக்கு உட்படுத்த கூடாது என்று ஐசிஎம்ஆர் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறிகைளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
தொற்று அறிகுறி இல்லாதவர்களை பரிசோதனை செய்ய வேண்டாம். தொற்று உறுதியாகும் நபர்கள் தொடர்புடைய இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அனைத்து மருத்துவமனைகளும் தற்போது இருப்பில் உள்ள ஆக்சிஜன் மற்றும் சேவைகளை உடனே மதிப்பிட வேண்டும். உட்கட்டமைப்பை ஆராய்ந்து, திரவ மருத்துவ ஆக்சிஜன் வசதியை உறுதிசெய்ய வேண்டும்.
கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், 48 மணி நேரத்துக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
ஆக்சிஜன் சிலிண்டர், அதை மீண்டும் நிரப்புவதற்கான அமைப்புகுறித்து ஆராய வேண்டும். வென்டிலேட்டர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்தி ருக்க வேண்டும்.
இவ்வாறு சுகாதார துறைச் செயலர் சுற்றறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT