பிதமர் மோடி குறித்து அவதூறுப் பேச்சு | தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய திருப்பூர் பாஜக இளைஞரணி நிர்வாகி கைது

பிதமர் மோடி குறித்து அவதூறுப் பேச்சு | தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய திருப்பூர் பாஜக இளைஞரணி நிர்வாகி கைது
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரதமர் மோடியைப் பற்றி அவதூறாகப் பேசியதாக தள்ளுவண்டி வியாபாரி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மாவட்ட பாஜக இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற 6 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடந்த வாரம் பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, பாதுகாப்பு குறைபாடுகளை காரணங்களைக் காட்டி, நிகழ்ச்சியை ரத்து செய்தார். இந்த சம்பவத்தை ஒட்டி, அங்கு ஆளும் காங்கிரஸ் அரசைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பில் நேற்று முன் தினம் மாலை மனிதச்சங்கலி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, பல்லடம் பேருந்து நிலையம் அருகே தள்ளுவண்டி வைத்து, அதில் பழங்கள் விற்பனை செய்து வரும் முத்துசாமி (55) என்பவர், பிரதமர் மோடியை பற்றி அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த பாஜகவினர், சாலையோர வியாபாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். இதையடுத்து வியாபாரி அருகில் இருந்த அலைபேசி கடைக்குள் ஓடியுள்ளார். இருப்பினும் கடைக்குள் புகுந்த பாஜகவினர், முத்துச்சாமியை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், தாக்குதலில் ஈடுபட்ட பாஜகவினரை தடுத்தனர். தொடர்ந்து, தாக்குதல் நடத்திய பாஜகவினரையும், தாக்கப்பட்டவரையும் பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து, இரு தரப்பினரிடமும் விசாரனை மேற்கொண்ட பல்லடம் காவல்துறையினர், தள்ளுவண்டி வியாபாரி முத்துச்சாமி மற்றும் 7 பாஜவினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக பல்லடம் போலீஸார் கூறும்போது, "பல்லடம் அம்மாபாளையத்தை சேர்ந்த முத்துசாமி, கடந்த 30 ஆண்டுகளாக தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று, குடிபோதையில் பிரதமரை பற்றி தரக்குறைவாக பேசி உள்ளார். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தாக்கியதில் அவர் காயம் அடைந்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜகவினர் 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் (40) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்ற 6 பேரை தேடி வருகின்றனர்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in