கரோனா அதிகரிப்பு: புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் 1 -9 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை

கரோனா அதிகரிப்பு: புதுச்சேரி, காரைக்காலில் நாளை முதல் 1 -9 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை
Updated on
1 min read

புதுச்சேரி: கரோனா அதிகரிப்பால் புதுச்சேரி, காரைக்கால் உட்பட அனைத்து பிராந்தியங்களிலும் நாளை முதல் 1 - 9 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா பரவலால் கடந்த 2020 மார்ச்சில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நடந்து வருகின்றன. அதையடுத்து நவம்பரில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை திறக்க முடிவு எடுக்கப்பட்டது. மழை காரணமாகத் திறக்க இயலாமல் போனது. ஆன்லைன் வகுப்புகளைக் கவனிப்பதில் சிரமமாக இருப்பதாகப் பெற்றோர் வலியுறுத்தல் அதிகரித்தது.

அதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒரு மாதமே பள்ளிகள் நடந்து வந்த சூழலில் புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடத்த அனுமதி தரப்பட்ட சூழலுக்குப் பிறகு கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

இதையடுத்து கல்வியமைச்சர் நமச்சிவாயம் இன்று பிறப்பித்த உத்தரவில், "கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து தனியார், அரசுப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இணைய வழிக் கல்வி (ஆன்லைன் கல்வி) நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே திறந்து நடைபெறும் 10 முதல் 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். அதில் மாற்றம் ஏதுமில்லை என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மொத்தம் 83 ஆயிரம் சிறார்களுக்கு பெற்றோர் அனுமதி பெற்று தடுப்பூசிப் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in