கழிவுநீர் கால்வாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததால் தஞ்சாவூரில் ஜெயலலிதா கோயில் இடிப்பு

கழிவுநீர் கால்வாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததால் தஞ்சாவூரில் ஜெயலலிதா கோயில் இடிப்பு
Updated on
1 min read

தஞ்சாவூர் மேலவீதியில் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம் கொண்ட கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் இடித்து அகற்றினர்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக சாலை மேம்பாட்டுப் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, தஞ்சாவூரில் உள்ள தேரோடும் வீதிகளில் சாலைகளை சீரமைத்து, மழைநீர் வடிகால்கள் கட்டி, அவற்றின் மீது நடைபாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மேல வீதியில் கொங்கனேஸ்வரர் கோயில் அருகில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படம் வைத்து கோயில் கட்டப்பட்டிருந்தது. இந்தக் கோயில் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, அந்தக் கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் மூலம் நேற்று முன்தினம் இடித்து அகற்றினர். இந்தக் கோயிலை முன்னாள் கவுன்சிலரும் கோட்டை பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளருமான சுவாமிநாதன் 2017-ம் ஆண்டு கட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in