

சென்னை: தமிழகப் பாடத்திட்டத்தில் புதுச்சேரி வரலாற்றையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அனுப்பியுள்ள கடிதம் விவரம்:
புதுச்சேரி யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. எனினும் தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கல்வியில் தமிழகத்தின் பாடத்திட்டத்தை புதுச்சேரி பின்பற்றி வருகிறது. தமிழகப் பாடத்திட்டத்தில் புதுச்சேரியின் வரலாற்றைச் சேர்க்க வேண்டும் என்பது புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
பிரெஞ்சு ஆளுகையில் இருந்து மீண்ட புதுச்சேரியின் போராட்ட வரலாறு தமிழகத்தின் போராட்ட வரலாற்றிலிருந்து வேறுபட்டது. தமிழக பாடத்திட்டத்தில் புதுச்சேரியின் வரலாற்றையும் சேர்ப்பது புதுச்சேரியின் வரலாற்றைப் புதுச்சேரி மற்றும் தமிழக மாணவர்கள் அறிய முடியும்.
அதனால், தமிழகப் பாடத்திட்டத்தில் புதுச்சேரியின் வரலாற்றையும் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான பாடத்திட்டங்களைத் தயாரிக்கவும் அதற்கான நூல்களை எழுதவும் தேவையான கல்வியாளர்களை புதுச்சேரி அரசின் கல்வித்துறை பரிந்துரை செய்யவும் அறிவுறுத்த தயாராக உள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.