Published : 21 Apr 2016 02:01 PM
Last Updated : 21 Apr 2016 02:01 PM
ஆளும்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது குற்றம்சாட்டினார்.
தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச் சாரம் செய்தார். அப்போது விழுப் புரத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அமீர் அப்பாஸை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசும்போது, "திமுகவுக்கு சிறுபான்மை மக்களின் ஆதரவு எப்போதும் இருக்கும். திமுக ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற பல திட்டங்கள் தீட்டப்பட்டு அவை நடை முறைப்படுத்தப்பட்டு விழுப்புரம் மாவட்டத்தை வளர்ச்சி பெறச் செய்தோம். ஆனால் தற்போது ஊழல்வாதிகளால் அரசு நிர்வாகம் சீர்கெட்டுள்ளது.
அதிமுக அமைச்சர்களும், நிர்வாகிகளும் பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களை பொதுமக்கள் விரட்டியடித்து வருகின்றனர்.
தேர்தலில் ஆளும் கட்சியினர் விதிமீறல்கள் தொடர்ந்து வருகிறது. அவற்றை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்தவில்லை.
ஆட்சியர், மாவட்டவருவாய் அலுவலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும்.
ஆனால் அவ்வாறு மாற்றப்பட்டிருக்கிறார்களா? 'அம்மா உத்தரவின் பேரில் மழை பெய்தது' என்ற கூறிய அதிகாரி இன்னும் அதே இடத்திலேயே பணிபுரிகிறார்.
இதையெல்லாம் பார்க்கும் போது தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தான் செயல்படுகிறது என்று தானே அர்த்தம். இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் பதில் கூறியாக வேண்டிய காலம் வெகு விரைவில் வந்து சேரும்.
ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களில் மனித உரிமை மீறல்கள் மீறப்படுகின்றன. மக்களைப் பற்றிக் கவலைப்படாத ஜெயலலிதா இதற்கும் பதில் கூறவேண்டிய கட்டாயம் ஏற்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT