

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை என தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக வழக்கு
தமிழகத்தில் 15 மாநகராட்சிகளில் உள்ள 1,064 வார்டுகள், 121 நகராட்சிகளில் உள்ள 3,468 வார்டுகள், 528 பேரூராட்சிகளில் உள்ள 8,288 வார்டுகள் ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை நியாயமாகவும், ஜனநாயக ரீதியாக நேர்மையாகவும் நடத்தக்கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில்நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில்மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்ஆஜராகி ‘‘கடந்தாண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஸ்ட்ராங்க் ரூமிலும் கூட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. அதில் பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறின.
அதிமுகவினர் தாக்கல் செய்த வேட்புமனுக்களின் பக்கங்கள் கிழிக்கப்பட்டு முறைகேடுகள் செய்யப்பட்டன. காரணமே இல்லாமல் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
எனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது வேட்புமனு தாக்கல், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை என அனைத்தையும் முழுமையாக 100 சதவீதம் வீடியோ பதிவு செய்யவும், கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார்.
மாநில தேர்தல் ஆணையம் உறுதி
மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் சிவசண்முகம் ஆஜராகி, ‘‘வேட்புமனுத்தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை ஒவ்வொரு நடவடிக்கையும் வீடியோ பதிவு செய்யப்படும். வேட்புமனுக்களின் பக்கங்களை குறிப்பிட்டு ஒப்புகைச் சீட்டு வழங்க விதிகள் இல்லை’’ என்றார்.
பின்னர் தலைமை நீதிபதி, ‘‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது வேட்புமனுத்தாக்கல், வாக்குப்பதிவு மற்றும்வாக்கு எண்ணிக்கை என தேர்தல்நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.