Published : 03 Mar 2016 10:45 AM
Last Updated : 03 Mar 2016 10:45 AM

கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம்கூட புதிதாக உற்பத்தி செய்யப்படவில்லை: திமுக தலைவர் கருணாநிதி குற்றச்சாட்டு

கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக ஒரு யூனிட் மின்சாரத்தை கூட உற்பத்தி செய்யாமல் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா திரும்பத் திரும்ப தவறான தகவலைக் கூறி வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிவிட்டதாக முதல்வர் ஜெயலலிதாவும், மின் துறை அமைச்சரும் அடிக்கடி சொல்லி பெருமைப்படுகின்றனர். கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட புதிய திட்டங்கள் மூலம் 4 ஆயிரத்து 455 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது உண்மை யெனில் எந்தெந்த திட்டங்கள் மூலம் எவ்வளவு மின்சாரம் கிடைக்கிறது? அவை யாருடைய ஆட்சியில் தொடங்கப்பட்டவை என்பதை மின்துறை அமைச்சர் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், வட சென்னை 3, 4-ம் நிலை, உடன்குடி, எண்ணூர், குந்தா ஆகிய மின் திட்டங்கள் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரத்து 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்தத் திட்டங்கள் என்ன ஆனது என்பதை அரசு விளக்க வேண்டும்.

கடந்த 2011 முதல் 2015 வரை 3 ஆயிரத்து 860 மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்கான ரூ.22 ஆயிரத்து 915 கோடி மதிப்பிலான 19 மின் திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை. மீதமுள்ள திட்டங்கள் மத்திய அரசு மூலமாக தொடங்கப்பட்ட திட்டங்களாகும்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் கோரி, பணிகளை நிறைவு செய்து மின் உற்பத்தி செய்ததைப் போல முதல்வரும், மின்துறை அமைச்சரும் திரும்பத் திரும்ப கூறி வருகின்றனர்.

2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்ட மின் திட்டங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரமாவது கிடைத்திருக்கிறதா? என்பதற்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டும்.

நாள்தோறும் மின்வெட்டு

திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகி ஊராரை மயக்கும் என்ற நப்பாசையில் தொடர்ந்து தவறான தகவலை சொல்லி வருகின்றனர். இது பற்றி எரியும் நெருப்புக்குள் பஞ்சுப் பொதியை வைப்பதற்கு ஒப்பானது என்பதை நாள்தோறும் மின்வெட்டால் பாதிக்கப்படும் மக்கள் அறிவார்கள்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x