

பெங்களூருவில் மாற்றுத்திறனாளி களுக்கு நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் குண்டு எறிதலில் சேலம் வீரர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.
சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி ராஜேந்திரன். இவர் கடந்த ஆண்டு விபத்தில் சிக்கி கண் பார்வை இழந்தார். இந்நிலையில், அவர் குண்டு எறிதல் பயிற்சியில் ஆர்வம் காட்டி வந்தார்.
இதையடுத்து, கடந்த வாரம் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்றார். இதில், குண்டு எறிதல் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதுதொடர்பாக பாலாஜி ராஜேந்திரன் கூறும்போது, ‘தடகள போட்டியில் கலந்து கொள்ள உறுதுணையாக இருந்த மாற்றுத்திறனாளி அசோசியேஷன் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பயிற்சியாளர் உலகநாதன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும், தொடர்ந்து விளையாடி இந்திய நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்” என்றார்.