Published : 23 Dec 2021 12:19 PM
Last Updated : 23 Dec 2021 12:19 PM

மஞ்சப்பை அவமானம் அல்ல; சுற்றுச்சூழலுக்கு ஏற்றது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் பிஸாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் இன்று பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியில் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

“மஞ்சப்பை அவமானம் அல்ல. அழகான நிறத்தில் இருக்கும் பிஸாஸ்டிக் பைகள் எல்லாம் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டவை. சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் பிஸாஸ்டிக் பயன்பாட்டை நாம் உடனடியாகக் குறைக்க வேண்டும். மஞ்சப்பைதான் சுற்றுச்சூழலுக்கு ஏற்றது.

ஒருமுறை பயன்படுத்தப்பட்டு பிறகு தூக்கி எறியும் பிஸாஸ்டிக் பொருட்கள்தான் சூழலை மாசாக்குகின்றன. பிளாஸ்டிக்கை மண்ணில் போட்டால் அது மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் மண் பாதிக்கப்படுகிறது. மண் பாதிக்கப்பட்டால் வேளாண்மை பாதிக்கப்படுகிறது. கால்நடைகள் அதைச் சாப்பிட்டு உயிரிழக்கும்.

பிளாஸ்டிக்கை நீர் நிலையங்களில் தூக்கி எறிந்தால் அங்குள்ள நீர் நிலையங்களும் மாசடைகின்றன. கடலின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பபடுகிறது. எனவே பிஸாஸ்டின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். எனவே பிஸாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க தமிழக அரசு ஏராளமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, 14 வகையான பிஸாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களிலும் இடைவிடாது பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசாங்கம் மட்டுமே பிஸாஸ்டிக் பொருட்களை ஒழித்துவிட முடியாது. மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாகச் செயல்படுத்த முடியும். எனவே மஞ்சப்பைதான் சிறந்தது. அனைத்துத் தொழில்களிலும் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் முன்னோடியாகத் திகழ வேண்டும்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x