தமிழக மீனவர்கள் மீது இலங்கையில் கிருமிநாசினி பீய்ச்சி அடித்து மனித உரிமை மீறல்: தேசிய மீனவர் பேரவை குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் மீது இலங்கையில் கிருமிநாசினி பீய்ச்சி அடித்து மனித உரிமை மீறல்: தேசிய மீனவர் பேரவை குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுச்சேரி: கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கையில் கிருமி நாசினி பீய்ச்சி அடித்து மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக தேசிய மீனவர் பேரவை குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ இன்று கூறுகையில், ''கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மற்றும் புதுகை மாவட்ட மீனவர்கள் 69 பேரையும் அவர்களின் 10 படகுகளையும் இலங்கை கடற்படை பிடித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஒவ்வொருவரையும் கையை உயர்த்தி நிற்கச் செய்து அவர்கள் மீது கிருமி நாசினி பீய்ச்சி அடித்துள்ளனர். கட்டடம், வாகனம் போன்ற உயிரற்ற பொருட்கள் மீது தெளிக்கக்கூடிய கிருமி நாசினியை மீனவர்கள் மீது பீய்ச்சி அடித்தது அப்பட்டமான மனித உரிமை மீறல். கரோனா காலத்தில் கூட இதுபோன்ற கொடுமை நிகழ்ந்தது இல்லை.

இச்செயல் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை மீறிய கொடூரச் செயல். இந்த மனித உரிமை மீறல் பற்றி சர்வதேச மனித உரிமை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனம் உரிய கண்டனத்தை வெளியிட வேண்டும். இதில் ஈடுபட்டோர் மீது இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்.

இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினையைத் தீர்க்க இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in