Published : 21 Dec 2021 07:39 AM
Last Updated : 21 Dec 2021 07:39 AM

‘வேதா நிலையம்’ தொடர்பாக தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு: உயர் நீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைப்பு

வேதா நிலையம் இல்லம் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பைஉயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

ஜெயலலிதா வசித்த போயஸ்தோட்டம் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில் அதைகையகப்படுத்தியும், அரசுடமையாக்கியும் கடந்த அதிமுக அரசுஉத்தரவிட்டது. வேதா நிலையம் இல்லத்துக்கான இழப்பீட்டுத் தொகையும் நீதிமன்றத்தில் அரசு சார்பில் செலுத்தப்பட்டது.

இதை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களான ஜெ.தீபா,ஜெ.தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, வேதா நிலையம் இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என்றும், இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்தும்கடந்த நவ.24-ல் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக தரப்பிலும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பிலும் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் பரேஷ் உபாத்யா, சத்திக்குமார் சுகுமார குருப் அமர்வில் நடந்தது.

அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, ‘‘தீபா, தீபக்கிடம் சாவிகளை ஒப்படைக்கும் முன்பாக இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன. ஆட்சிமாற்றம் ஏற்பட்டுவிட்டதால் முந்தைய அரசு எடுத்த முடிவுகள் செல்லாது என கூறி விடமுடியாது’’ என்றார்.

தீபக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏஆர்எல் சுந்தரேசன் ஆஜராகி, ‘‘ஏற்கெனவே ரூ.80கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ரூ.70 கோடி செலவில் நினைவு இல்லம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.

தீபா தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி, ‘‘வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்தியதில் நடைமுறை தவறுகள் உள்ளது.இந்த வழக்கை தொடர அதிமுகவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை’’ என்றார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ‘‘வேதா நிலையம் இல்லம் தொடர்பாக ஏற்கெனவே அதிமுக நிர்வாகிகள் இருவர் தொடர்ந்த வழக்கில் அவர்களது மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெளிவான உத்தரவை பிறப்பித்து விட்டது.தீபா, தீபக் தொடர்ந்த வழக்கைவிசாரித்த தனி நீதிபதியும் அரசுடமையாக்கியது செல்லாது என்று தான் உத்தரவிட்டுள்ளார். அந்த தீர்ப்புகளின் அடிப்படையில் தான்தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வேதா நிலையம் இல்லத்தின் சாவி தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது’’ என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்தவழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x