

அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனையை கட்டாயமாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் கடிதம்எழுதியுள்ளார். அக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 28 பேருக்கு அறிகுறி
தமிழகத்தில் இதுவரை 28 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில், 4 பேர் மட்டுமே பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள். மீதமுள்ள 24 பேர் குறைவானபாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தவர்களாகவும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாகவும் உள்ளனர். ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு 48 மணி நேரத்தில் ஒமைக்ரான் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இது, ஒமைக்ரான் மிக வேகமாக பரவும்தன்மையை காட்டுகிறது. தற்போதுவரை ஒமைக்ரான் அதிகம் பாதிப்புள்ள பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கூடுதல்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
ஆபத்தில்லாத நாடுகளில் இருந்து வருவோருக்கு எவ்விததீவிர கட்டுப்பாடுகளும் இல்லாமல்உள்ளது. அங்கிருந்து வருபவர்களில் வெறும் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால், ஒமைக்ரான் பரவலை தடுக்க முடியாது. பரவல் அதிகரிக்கக் காரணமாகிவிடும். அதனால், அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த மத்திய சுகாதாரத் துறை அனுமதிக்க வேண்டும்.
அதேபோல், கரோனா பரிசோதனையில் நெகடிவ் என முடிவு வந்தால் மட்டுமே விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுதிக்கவேண்டும். ஒரு விமானத்திலிருந்து மற்றொரு விமானத்துக்கு மாறுவதாக இருந்தால் கூட நெகடிவ் முடிவு அவசியமாக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு நெகடிவ் என்றால் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின் 8-ம் நாள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதில் தொற்று உறுதியானால் ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி சிகிச்சை வழங்க வேண்டும். நெகடிவ் என்றால் மேலும் 7 நாட்கள்தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.