

புதுடெல்லி: குடும்பக் கட்டுப்பாடு முன்முயற்சிகளின் விளைவாக, தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 2017-ல் 17.2 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2019-ல் ஆக 14.2 இருந்தது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துபூர்வமாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் அளித்த பதிலில், "குடும்ப வளர்ச்சி இயக்கம், விரிவாக்கப்பட்ட கருத்தடை வசதிகள், கருத்தடை செய்துகொள்வோருக்கான நஷ்ட ஈடு திட்டம், ஆஷா பணியாளர்கள் மூலம் கருத்தடை சாதனங்களை வீடுகளுக்கே கொண்டுவந்து தருதல், குடும்பக் கட்டுபாட்டுத் தகவல் மேலாண்மை அமைப்பு, ஊடகப் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியம் தொகுப்பின் கீழ் குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காகத் தமிழ்நாட்டில் 2018-19இல் ரூ.12,375.39 லட்சமும், 2019-20இல் ரூ.11.150.52 லட்சமும், 2020-21இல் ரூ.9,032.17 லட்சமும், 2021-22இல் ரூ.184.98 லட்சமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2017-ல் ஆக 17.2 இருந்த பிறப்பு வீதம் 2019-ல் ஆக 14.2 இருந்தது. புதுச்சேரியில் 2017-ல் 13.2 ஆக இருந்த பிறப்பு வீதம் 2019-ல் 13.3 ஆக இருந்தது" என்று மத்திய இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்