ஸ்ரீநகரில் காவல்துறை பேருந்தின் மீது தீவிரவாத தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம் 

ஸ்ரீநகரில் காவல்துறை பேருந்தின் மீது தீவிரவாத தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம் 
Updated on
1 min read

ஸ்ரீநகரில் காவல்துறைப் பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ஸ்ரீநகர் அருகே காவல்துறைப் பேருந்தின் மீது நடத்தப்பட்டுள்ள கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதலைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தேன். இந்தக் கொடுஞ்செயலுக்கு எனது கண்டனத்தைப் பதிவுசெய்வதோடு, உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்ற காவலர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்றிரவு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் போலீஸார் சென்ற வாகனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயுதப்படை காவலர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.

பாதுகாப்புப் படையினரின் குடியிருப்புப் பகுதியான சேவான் பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது. இரண்டு தீவிரவாதிகள் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதி பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி அலுவலக ட்விட்டர் பக்கத்தில், ஜம்மு, காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முழு விவரமும் கோரியுள்ளார். இத்தாக்குதலில் வீரமரணமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in