

டிசம்பர் 18-ம் தேதி சென்னையில் திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டம் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
''திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 18.12.2021 சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.