மதுரையில் நிதி நிறுவன ஊழியர்களைத் தாக்கி 166 சவரன் நகை, ரூ.91 ஆயிரம் கொள்ளை

மதுரையில் நிதி நிறுவன ஊழியர்களைத் தாக்கி 166 சவரன் நகை, ரூ.91 ஆயிரம் கொள்ளை

Published on

மதுரை மாவட்டம் மேலூரில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களைத் தாக்கி 166 சவரன் நகை மற்றும் ரூ.91 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட ஆரப்பாளையம் பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு செந்தில், மைக்கேல் ராஜ் ஆகியோர் ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் நேற்று சரவணன் என்பவருடன் காரில் விழுப்புரம் சென்றதாகக் கூறப்படுகிறது. விழுப்புரத்தில் வங்கி ஒன்றில் நடந்த அடகு நகை ஏலத்தில் பங்கேற்றவர்கள், 1,332 கிலோ கிராம் (166- சவரன்) நகைகளை ஏலத்தில் எடுத்துவிட்டு நகைகளுடன் மதுரைக்கு காரில் திரும்பியுள்ளனர்.

நள்ளிரவில் மதுரை மேலூர் கொட்டாம்பட்டி அருகிலுள்ள அய்யாபட்டி விலக்கு அருகே வந்து கொண்டிருந்த காரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல், ஊழியர்களைத் தாக்கிவிட்டு அவர்கள் கொண்டுவந்த 166 சவரன் நகை மற்றும் 91,667 ரூபாயைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது.

இது தொடர்பாகத் தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த மைல்கேல் ராஜ் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களைத் தேடிய நிலையில், சுக்காம்பட்டி அருகே கடத்தப்பட்ட காரைக் கொள்ளையர்கள் விட்டுச் சென்றது தெரிந்தது. இதனையடுத்து போலீஸார் காரைக் கைப்பற்றினர்.

இதனிடையே, எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில், கொள்ளையடித்த கும்பலை 3 தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் திருச்சி- மதுரை சாலையில் பதிவான சிசிடிவி பதிவுகளைச் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தனியார் நிதி நிறுவன ஊழியர்களைத் தாக்கிய மர்ம கும்பல் ஒன்று நகை, பணம் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in