தேசிய விருது பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தேசிய விருது பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Updated on
1 min read

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகள் உரிமை ஏற்றத்துக்கான தேசிய விருது பெற்ற 6 பேர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, கடந்த டிச.3-ம் தேதி டெல்லியில் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் சார்பில், மாற்றுத் திறனாளிகள் உரிமை ஏற்றத்துக்கான தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில், பார்வைத் திறன் குறையுடையவர்கள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஏ.எம்.வேங்கடகிருஷ்ணன், எஸ்.ஏழுமலை, அறிவுசார் குறைபாடு உடையவர்கள் பிரிவில் சிறந்த பணியாளர், சுயதொழில்புரிவோர் விருது பெற்ற கே.தினேஷ், பல்வகை குறைபாடு உடையவர் பிரிவில் விருது பெற்ற மானக்சா தண்டபாணி, அதே பிரிவில் சிறந்த சான்றாளர் விருது பெற்ற கே.ஜோதி, டி.பிரபாகரன் ஆகிய மாற்றுத் திறனாளிகள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து விருது பெற்றனர்.

இவர்கள் 6 பேரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து, விருதைக் காண்பித்து, அவரிடம் வாழ்த்து பெற்றனர். தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் ஆர்.லால்வேனா உடனிருந்தனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in