

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 2022 மார்ச் மாதம் முதல் புதிய பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கொள்கை விளக்க குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே இந்த இடத்தில் விஜிபி நிறுவனத்தினர் உலக அமைதி மாதா கோயிலை கட்டி இருந்தனர். பேருந்து நிலைய நுழைவு வாயில் அமைப்பதற்கு கோயில் இடையூராக உள்ளதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வண்டலூர் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் கோயிலில் இருந்த சிலையை பத்திரமாக அப்புறப்படுத்தினர். மேலும் கோயில் கட்டிடத்தை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இடித்து தள்ளினர். மேலும் மாதா சிலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.