

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
ஏனைய தென் மாவட்டங்கள், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.”
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.