

டிச.6 தினத்தையொட்டி பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டிச.6 பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் அசம்பாவிதங்கள் நடப்பதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், ராமேசுவரம் அருகே பாம்பன் கடலில் அமைந்து உள்ள ரயில் பாலத்துக்கு துப்பாக்கி ஏந்திய ரயில்வே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் தமிழ்நாடு ரயில்வே போலீஸ் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவானந்தம், தலைமைக் காவலர்கள் முருகன், மல்கோத்ரா பாண்டியன் உள்ளிட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் பாலத்தில் ரயில்வே ஊழியர்கள் தவிர அன்னியர்கள், மீனவர்கள் செல்ல வேண்டாம் எனப் போலீஸார் எச்சரித்துள்ளனர். இதேபோல்ராமேசுவரம், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.