Published : 02 Dec 2021 03:06 AM
Last Updated : 02 Dec 2021 03:06 AM

48 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி: குன்னூர், தாராபுரத்தில் 4 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

உதகை/உடுமலை

குன்னூர், தாராபுரத்தில் உள்ள 4 பள்ளிகளில் படிக்கும் 48 மாணவ, மாணவிகளுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள், தனியார் தங்கும் விடுதியில் தங்கி பள்ளிக்குச் சென்று வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் அவர்களில் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாணவிகள் அனைவரும் விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, அரசு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகின்றனர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் கூறும்போது, “21 மாணவிகள் பயிலும் 3 பள்ளிகள் 5 நாட்கள் மூடப்படுகின்றன. இந்தப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் பயிலும் மாணவர்களில் சிலருக்கு சளி, காய்ச்சல் இருந்துள்ளது. இதுகுறித்த தகவலின் பேரில் அரசு வட்டார மருத்துவர் தேன்மொழி தலைமையில் மருத்துவக்குழுவினர் சென்று, அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதில் 27 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, 3 நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தாராபுரம் வட்டாட்சியர் சைலஜா ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘27 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பள்ளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மற்றொரு தனியார் பள்ளியில் 250 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அங்கும் சிலருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் விவரம் முழுமையாக தெரியவில்லை. அந்த பள்ளியிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x