கோயம்பேட்டில் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பேராசிரியர் கைது

மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி, கல்லூரி வாயில் முன்பாக மாணவ, மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ம.பிரபு
மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி, கல்லூரி வாயில் முன்பாக மாணவ, மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் தமிழ்ச்செல்வன்(40). கல்லூரி மாணவிகளுக்கு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியான குறுந்தகவல்கள் அனுப்பியதாகவும், மாணவி ஒருவருக்கு நேரடியாக பாலியல் தொல்லை அளித்ததாகவும் அவர் மீது மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கோயம்பேடு சரக உதவி ஆணையர் ரமேஷ்பாபு தலைமையில் கோயம்பேடு பேருந்து நிலைய காவல் ஆய்வாளர் குணசேகர், கோயம்பேடு காவல் ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ஆசிரியர் தமிழ்ச்செல்வனை கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து பேராசிரியர் தமிழ்செல்வனை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். முதல்வர் தலைமையில் கமிட்டி அமைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால் நேற்று காலை வரை தமிழ்ச்செல்வனை கைது செய்யவில்லை. இதனால் மாணவர்கள் நேற்றும் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் கல்லூரி வளாகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென மாணவ மாணவிகள் கோயம்பேடு மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அவரை கைது செய்வதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில் பேராசிரியர் தமிழ்ச்செல்வனை நேற்று பிற்பகலில் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in