

அன்புமணியை கோட்டையில் அமர வைப்பது உங்கள் கையில் உள்ளது என்று பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூடடத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் இன்று(நவ.25) கடலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,
"நாம் யாருக்கு போராடி இட ஒதுக்கீட்டை பெற்று தந்தோமே அவர்கள் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு மேல் முறையீடு செய்து சரியாகவே செய்கிறது. நல்ல வழக்கறிஞர்களை கொண்டு வழக்கை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
தீர்ப்புகான தடை உத்தரவு கிடைக்கும் என நிச்சயமாக நாம் நம்புகிறோம். நாம் தமிழ்நாட்டை ஆள வேண்டும், அன்புமணி முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தோடு வீடு, வீடாக, திண்ணை, திண்ணையாக இளைஞர்கள் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும். இனி வரும் காலங்களில் ஒரு தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகளை பாமக பெற வேண்டும். 1 பூத்தில் ஆயிரம் வாக்குகளை பெற வேண்டும். நீங்கள் வந்த வழி ஆண்ட பரம்பரையில் வந்தவர்கள். இன்று அடுத்தவர்களை நாம் துதி பாடிக்கொண்டு இருக்கிறோம். உங்களுக்காக குரல் கொடுக்க நான் ஒருவன் இன்னும் உயிருடன் இருக்கிறேன்.
வயதானவர்கள் பேச தான் முடியும் இனி இந்த கட்சி இளைஞர்களை நம்பி தான் உள்ளது. தமிழகத்தில் 60 இடங்களில் சுலபமாக வெற்றிபெற்றால் அன்புமணி ராமதாஸ் முதல்வராக ஆள முடியும்.42 ஆண்டுகள் மக்களுக்காக பாடுபட்டு இருக்கிறேன். அன்புமணியை போல ஒரு திறமையானவர் யாரும் இல்லை. ஏன் மக்கள் ஆட்சியை கொடுக்க தயங்குகிறார்கள். 60 லட்சம் வாக்குகள் பெற உழைக்கவில்லை, வீடு வீடாக, திண்ணை, திண்னையாக போங்கள்,
வஞ்சகம் உள்ள கட்சிகளுக்கு வாக்கு போட்டு விட்டீர்கள் ஒரு முறை பாமகவிற்கு வாக்கு சொலுத்துங்கள் என திண்ணை பிரச்சாரத்தை செய்யுங்கள் அதேபோல் சமூக வலைதளங்கள் மூலமும் பிரச்சாரம் செய்யுங்கள் அப்படி செய்யும் போது ஆட்சி கட்டிலை நோக்கி செல்லும். கோட்டையில் பாமக கொடி பறக்கும், அதை நோக்கி யூகங்கள், உழைப்புகள் இருக்க வேண்டும்.இளைஞர்கள் வானத்தை வில்லாக வளைக்கலாம், மலையை தவிடுபொடியாக்கலாம்.
ஷத்திரியனின் என்று சொன்னால் ஆளுபவன். அன்புமணியை கோட்டையில் அமர வைப்பது உங்கள் கையில் உள்ளது. அன்புமணியை கோட்டையில் அமர வைப்போம் என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள்.
வீட்டில் கரோனாவில் இருந்து வயதானவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.முந்திரி தொழில்சாலை ஊழியர் கோவிந்தராஜ் வழக்கை நான் கையில் எடுத்து இருக்கிறேன். நிச்சயமாக தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும், காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலில்ம் தோல்வியை தழுவியுள்ளது பாமக இதற்க்கு காரணம் மாவட்ட செயலாளர்கள் தான்" என்றார்.
[