Published : 20 Nov 2021 03:08 AM
Last Updated : 20 Nov 2021 03:08 AM

கார்த்திகை தீப திருநாளில் சிவாலயங்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீப திருநாளையொட்டி காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சிவாலயங்களில் மகாதீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மலைக் கோயில்களில் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமியை வழிபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள மலைக்கோயிலில் சுயம்பு மூர்த்தியாக வேதகிரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதனால், மாதா மாதம் வரும் பவுர்ணமி நாட்களில் இங்கும் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். இந்நிலையில், கார்த்திகை மாத தீபத் திருநாள் விழா நேற்று நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல், சுவாமி வீதியுலாவும் ரத்து செய்யப்பட்டது.

எனினும், கோயில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மூலம் சிறப்பு ஆராதனைகளுடன் மலைக்கோயிலில் மகாதீபம்ஏற்றப்பட்டது. இதையடுத்து, மலையடிவாரத்தில் இருந்த பக்தர்கள் ‘அரோகரா அரோகரா’ என முழக்கமிட்டு சுவாமியை வழிபட்டனர். திருவண்ணாமலையில் மகாதீபத்தைக் காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படாததால், இந்த கோயிலில் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை கிரிவலம் வந்து சுவாமியை வழிபட்டனர்.

இதேபோல், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர், பசுபதீஸ்வரர், கூவத்தூர் வாலீஸ்வரர், திருக்கழுக்குன்றம் ருத்ரகோட்டீஸ்வரர் கோயில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் தீபம்ஏற்பட்டது. கார்த்திகை தீபத்தை ஒட்டி, வீடுகளில் பெண்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து மாலையில் வீட்டின் முன்பு அகல் விளக்குகள் ஏற்றுவது வழக்கம். ஆனால், மழை விட்டு, விட்டு பெய்ததால் பெரும்பாலான இடங்களில் வீீட்டில் உள்ளேயே விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நகரப் பகுதியில் பஞ்சபூத தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏகாம்பரநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடுகளுடன் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதேபோல்கச்சபேஸ்வரர், முக்தீஸ்வரர், கயிலாசநாதர், சத்யநாதஸ்வாமி, வழக்கறுத்தீஸ்வரர் கோயில் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் மகாதீப சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், குமரக்கோட்டம் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி முருகன் கோயில் மற்றும் சிவாலயங்களில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று எளிமையாக கொண்டாடப்பட்டது. இதில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கிரீடம், பச்சை மாணிக்க மரகதக் கல், வைரம், தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்ட சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிறகு, காலை 10 மணியளவில், காவடி மண்டபத்தில் உற்சவர் முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, கரோனா தடுப்பு நடவடிக்கையாக, வழக்கம்போல் மாலை 6 மணியளவில், உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் மாடவீதிகளில் வருவதற்கு பதிலாக, கோயிலின் மேல் பிரகாரத்தில் வலம் வந்தார். அப்போது, திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் எதிரே சுமார் 150 அடி உயரத்தில் உள்ள பச்சரிசி மலையில் நூறு கிலோ நெய் மற்றும் நூறு அடி நீள திரியால் தயாரிக்கப்பட்ட விளக்கில், தீபம் ஏற்றப்பட்டது.

இந்த தீபம் ஏற்றும் நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகவே, கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் குறைந்த எண்ணிக்கையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்றனர். திருத்தணி, திருவள்ளூர், அரக்கோணம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

அதே போல், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில், திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்கள் மற்றும் முருகன் கோயில்களில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றி, கார்த்திகை தீபத் திருவிழா மிக எளிமையாக கொண்டாடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x