Last Updated : 19 Nov, 2021 03:22 PM

 

Published : 19 Nov 2021 03:22 PM
Last Updated : 19 Nov 2021 03:22 PM

கள்ளக்குறிச்சியில் மழை பாதிப்பு: பார்வையிடுவதில் இரு அமைச்சர்களுக்கு இடையே நிலவும் கோஷ்டி பூசல்

திருக்கோவிலூர் தொகுதிக்குப்பட்ட தீபமங்கலம் கிராமத்தில் மழைநீர் பாதிப்புகளைப் பார்வையிட்ட உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைப் பார்வையிடுவதில் இரு அமைச்சர்களுக்கு இடையே நிலவும் கோஷ்டி பூசலால் மாவட்ட ஆட்சியரின் செயல்பாடு திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளது.

வடகிழக்குப் பருவமழையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பி, வடிகால்கள் தூர் வாராததால் மழை நீர் குடியிருப்புப் பகுதிகளையும், விளைநிலப் பகுதிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளது. இதனால் பலர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மழை வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கள்ளக்குறிச்சி ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, வெள்ள நீர் வெளியேற்றப் பொதுப்பணித் துறையினருக்கும், ஊரக வளர்ச்சித் துறையினருக்கும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட தீபமங்கலம் கிராமத்தில் நிவாரண உதவி அளிக்கத் தொகுதியின் எம்எல்ஏவும், உயர் கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி இன்று காலை 10 மணிக்கு வருவதாகத் தெரிவித்து, அதன்படி அங்கே சென்றுள்ளார். மாவட்ட ஆட்சியரும் அமைச்சருடன் இணைந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகளை அவரிடம் விளக்கியுள்ளார்.

இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குழுத் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு, சங்கராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் தா.உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட உள்ளிட்ட திமுக நிர்வாகிகளுடன், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட சித்தப்பட்டிணம், கடம்பூர், ஏந்தல், சாத்தப்பூர் மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 11 மணிக்கு ஆய்வு செய்யவிருப்பதாகக் கூறி 11 மணிக்கு அங்கு சென்றுள்ளார். இதையறிந்த மாவட்ட ஆட்சியர், அமைச்சர் பொன்முடியிடம் விளக்கமளித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சங்கராபுரம் சென்றார்.

அப்போது அமைச்சர் எ.வே.வேலு ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட டி.கே.மண்டபம், ராஜமலையம் கிராமங்களில் குடியிருப்புப் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளைப் பார்வையிட்டு, அங்கு பாதிப்படைந்தவர்களுக்கு நிதியுதவி அளித்தார். பின்னர் ஆட்சியரிடம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் பாதிப்புப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட ராஜமலையம் கிராமத்தில் மழைநீர் பாதிப்புகளைப் பார்வையிட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு

ஆட்சியருடன் சென்ற அதிகாரிகள் கூறும்போது, “இவர்களின் கோஷ்டி பூசலுக்கு இடையே சிக்கி சின்னாபின்னமாவது நாங்கள்தான். இவரை கவனிப்பதா, அவரை கவனிப்பதா என்று புரியாமல் அல்லாடுகிறோம். பாவம் மாவட்ட ஆட்சியரின் பாடுதான் படு திண்டாட்டம். அவர் அழைத்த நேரத்திற்குச் சரியாகச் செல்லவேண்டும். இவர் அழைத்த நேரத்துக்கும் சரியாகச் செல்லவேண்டிய நிர்பந்தம். இதனிடையே மழை வெள்ள நிவாரணப் பணிகளில் ஏதேனும் குறை ஏற்பட்டால் இருவரின் அதிருப்திக்கும் ஆளாக நேரிடுகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள் கூறுகையில், ”கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 4 திமுக உறுப்பினர்கள், அவர்களில் ஒருவரான க.பொன்முடி அமைச்சர் என்றபோதிலும், மாவட்டத்தில் உள்ள மற்ற திமுக எம்எல்ஏக்களுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தலையிடவேண்டாம் எனக் கட்சித் தலைமை அறிவுறுத்தலின் பேரில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தொகுதியைத் தாண்டி வருவதில்லை. அதனால்தான் எ.வ.வேலுவை கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தனது தந்தையை கள்ளக்குறிச்சி மாவட்ட எம்எல்ஏக்கள் மதிப்பதில்லை என்ற காரணத்தினால் கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரான கவுதம சிகாமணியும், தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட மழைவெள்ள சேத பாதிப்புகளை இதுவரை பார்வையிடக் கூட வரவில்லை. மாறாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குப்பட்ட சேலம் மாவட்டத் தொகுதிகளில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். கள்ளக்குறிச்சிக்கான எம்.பி. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்ப்பது தொகுதி மக்களிடம் மட்டுமல்ல சொந்தக் கட்சியினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x