Published : 18 Nov 2021 03:06 AM
Last Updated : 18 Nov 2021 03:06 AM

சர்வர் கோளாறு காரணமாக இபிஎஃப்ஓ -வில் இருந்து பணம் எடுப்பதில் பிரச்சினை: விரைந்து நடவடிக்கை எடுக்க சந்தாதாரர்கள் கோரிக்கை

இணையதள சர்வர் கோளாறு காரணமாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாமல்,கடந்த ஒரு வாரமாக சந்தாதாரர்கள் அவதிப்பட்டு வருவதால், இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் (இபிஎஃப்ஓ) உறுப்பினர்களாக உள்ள சந்தாதாரர்கள், தங்களது மாத ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வருகின்றனர். அதே அளவு தொகை அவர்கள் பணிபுரியும் நிறுவனம் சார்பிலும் செலுத்தப்படும். இதிலிருந்து ஒரு குறிப்பிட்டதொகையை திருமணம், வீடுகட்டுதல், மருத்துவச் செலவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு சந்தாதாரர்கள் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

மருத்துவச் செலவுகள்

கரோனா தொற்றுக் காலத்தில் ஏராளமான சந்தாதாரர்கள் மருத்துவ செலவுகளுக்காக, இந்தக் கணக்கில் இருந்து பணம் எடுத்துள்ளனர். இப்பணத்தை எடுப்பதற்காக, நாள்தோறும் இணையதளம் மூலம் நூற்றுக்கணக்கான சந்தாதாரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒருவாரமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாமல் சந்தாதாரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “சர்வர் இணைப்பு கிடைக்காததால், கடந்த ஒரு வார காலமாக பணம் எடுக்க முடியவில்லை. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

இதுதொடர்பாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, “கடந்த 10 நாட்களுக்கு முன்புஎங்கள் அலுவலக சர்வரில் பிரச்சினை ஏற்பட்டது. தற்போது, அதுசரி செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் ஏதாவது தொழில்நுட்ப காரணங்களால் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். இப்பிரச்சினையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x