

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைஇந்தியாவுக்கான இலங்கைதுணைத் தூதர் டி.வெங்கடேஸ்வரன் நேற்று சந்தித்துப் பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில் 30 நிமிடங்களுக்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்தது.
அப்போது, இலங்கை - தமிழகம் தொடர்பான பிரச்சினைகள், இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகளுடன் ஆலோசனை
கடந்த செப்டம்பர் 18-ம் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்ற ஆர்.என்.ரவி, தமிழக அரசின் தலைமைச் செயலர், டிஜிபி, உளவுத் துறைத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து தமிழக நிலவரங்களையும், அரசின் செயல்பாடுகளையும் அறிந்துவருகிறார். சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதருடன் ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.