சமச்சீர் கல்வியால் பயனில்லை: அன்புமணி ராமதாஸ் கருத்து

சமச்சீர் கல்வியால் பயனில்லை: அன்புமணி ராமதாஸ் கருத்து
Updated on
1 min read

`தமிழகத்தில் சமச்சீர் கல்வியால் எந்த பயனும் இல்லை’ என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

`தமிழக வளர்ச்சி பற்றி’ என்ற தலைப்பில் 7 நகரங்களில் 7 நாட்கள் அவர் பொதுமக்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகள் கடந்த 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நேற்று தரமான கல்விக்கான செயல் திட்டங்கள் குறித்து அவரது உரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவர் பேசியதாவது:

தமிழக மக்கள் தொகையில் 1.30 கோடிபேர் மாணவ, மாணவிகள். அவர்களுக்கு தரமான கல்வி அளிக்கப்படவில்லை. தரமான பள்ளிகள் இல்லை. ஆசிரியர்கள் இல்லை. பொறியியல் கல்லூரிகளில் படித்து முடித்து ஆண்டுக்கு லட்சக்கணக்கில் இளைஞர்கள் வெளியே வருகிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இந்த பிரச்சினைகள் குறித்து ஜெயலலி தாவுக்கு கவலை இல்லை.

தமிழகம் கல்வித்துறையில் தற்போது நாட்டிலேயே 14-வது இடத்தில் இருக்கிறது. இங்கு படித்தவர்கள் சதவீதம் 80. அருகிலுள்ள கேரளத்தில் இது 93 சதவீதமாகவும், புதுச்சேரியில் 91, இலங்கையில் 92 சதவீதமாக இருக்கிறது. கல்வித்துறையில் தமிழகத்தை பின்தங்கிய மாநிலமாக்கிய சாதனையைத்தான் அதிமுகவும், திமுகவும் கடந்த 50 ஆண்டுகளாக செய்திருக்கின்றன. கல்வி ஒரு வணிகமாக தற்போது மாற்றப்பட்டிருக்கிறது.

சமச்சீர் கல்வியை கொண்டுவர வேண்டும் என்று பாமக கொடுத்த அழுத்தம் காரணமாக சமச்சீர் கல்வி தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் தரமில்லாத வகையில் அதை திமுக அரசு கொண்டுவந்தது. தற்போது சமச்சீர் கல்வியால் எந்த பயனும் இல்லை. பாமக ஆட்சிக்கு வந்தால் சிபிஎஸ்இ தரத்துக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவோம். கல்வியில் மிகப்பெரிய புரட்சியை கொண்டுவருவோம். திறன் சார்ந்த, தொழில் சார்ந்த கல்வியை புகட்டுவோம். கல்வி அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்படும். இலவசங்களுக்கு மக்கள் கையேந்தும் நிலையை மாற்றுவேன். கல்வி, சுகாதாரத்தை இலவசமாக அளிப்பேன். வேலை வாய்ப்புகளை உருவாக்கு வேன். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அன்புமணி ராமதாஸ்.

தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கல்வி தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in