பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம்: உயர் நீதிமன்றம் வேதனை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பேரிடர் மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு என, சமச்சீரான இழப்பீடு வழங்க விதிகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலையில் சென்றபோது மரம் விழுந்து இரு வேறு விபத்துகளில் பலியான முதியவர் மற்றும் சிறுவனின் குடும்பத்தினர் தரப்பில் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்குகளை விசாரித்த நீதிபதி, பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், மனுதாரர்கள் தரப்பில், ஒருசில நிகழ்வுகளில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படுகிறது என்றும், சில நிகழ்வுகளில் ரூ.50 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 லட்சம் என இழப்பீடுகள் வழங்கப்படுவதாகக் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த பாரபட்சத்தைத் தவிர்க்க, பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு இழப்பீட்டைத் தீர்மானிக்க எட்டு வாரங்களில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இழப்பீடு கோரி 12 வாரங்களில் அரசுக்கு விண்ணப்பிக்க மனுதாரர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்த விண்ணப்பங்கள் மீது புதிய விதிகள் அறிவிக்கப்பட்ட 8 வாரங்களில் முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

அரசு வழங்கும் இழப்பீடு என்பது, பாதிக்கப்பட்டோர் காப்பீடு கோரத் தடையாக இருக்காது எனக் குறிப்பிட்ட நீதிபதி, உள் கட்டமைப்புகளை முறையாகப் பராமரித்து இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in