புதுச்சேரியில் 43 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 2 பேர் உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

புதுச்சேரியில் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி சுகாதாரத்துறை இன்று (நவ.14) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,662 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 11, காரைக்காலில் 13, ஏனாமில் 10, மாஹேவில் 9 பேருக்கும் என மொத்தம் 43 பேருக்கு (1.62 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 444 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 96 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 201 பேரும் என மொத்தமாக 297 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுச்சேரி சுப்பையா சாலையைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி, மாஹேவைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி என இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,865 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது. புதிதாக 19 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 282 (98.32 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 11 லட்சத்து 55 ஆயிரத்து 261 பேருக்கு (இரண்டாவது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in